குஜராத் தொழில் வளர்ச்சி: மோடிக்கு கலாம் பாராட்டு!
வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்துறை வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி அரசும், குஜராத் சிறு முதலீட்டாளர்களுமே காரணம் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குஜராத் தொழிலக சம்மேளத்தின் தொழில்துறை விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்கலாம். அப்போது அவர் பேசுகையில், 14 சதவீத தொழில் வளர்ச்சியை அடைய இலக்கு ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகிறது குஜராத். 11வது திட்ட காலத்தில் இதை சாதிக்க அவர்கள் முனைப்புடன் உள்ளனர். இதன் மூலம் இந்த மாநிலத்தின் தனி நபர் வருமானம் பெருமளவில் உயரும்.
அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியிலும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதிலும், 51 பொருளாதார மண்டலங்கள் என்று கூறினார்கள், குஜராத் அரசு உயர்ந்த முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில் வளர்ச்சி பெரும் வளர்ச்சி அடையும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் கவரும். ஏராளமான வேலை வாய்ப்புகளை மக்களுக்குக் கொடுக்கும்.
குஜராத்துக்குள்ளேயே நல்ல தொழில் போட்டி நிலவுகிறது. இதனால் பலன் கிடைக்கப் போவது இந்த மாநில மக்களுக்கும், மாநில நலனுக்கும்தான்.
குஜராத்தில் உள்ள அனைத்து சிறிய, பெரிய, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை நாட்டின் பிற தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து செயல்பட்டால், மிகப் பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.
2020ம் ஆண்டு வாக்கில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடைந்த, பாதுகாப்பான, தீவிரவாத அச்சமற்ற, அமைதியான வல்லரசாக மாறி விடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் கலாம்.