கூவாகத்தில் அரவாணிகள் பேரணி - ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைக்கிறார்
விழுப்புரம் அருகே கூவாகத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அரவாணிகள் பேரணி நாளை நடக்கிறது. தாய் திட்டம், தாய் விழுதுகள் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த பேரணியை தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைக்கிறார்.
விழுப்புரம் பஸ்நிலையம் முன் தொடங்கி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வரை பேரணி செல்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோவை, தேனி, தர்மபுரி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து ஏராளமான அரவாணிகள் இதில் பங்கேற்கின்றனர்.
பேரணியில் நாட்டுப்புற கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், கோலாட்டம், பறையாட்டம் ஆகியவற்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், விடுதலைசிறுத்தைகளின் அரவாணி நல உரிமை இயக்கத்தின் சார்பில் அரவாணிகள் எழுச்சி விழா நாளை மாலை 5 மணிக்கு விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. திருமண மண்டபத்தில் நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, அரவாணிகள் நலவாரிய உறுப்பினர் மோகனாம்பாள், விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் சங்கத் தலைவி ராதாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.