கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் தாலி அறுப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்து வந்த கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா இன்றுடன் முடிகிறது. நேற்று அரவாணிகளின் தாலி அறுப்பு நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டமும் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அரவாணிகள் விடிய, விடிய கும்மியடித்து கும்மாளம் போட்டனர். காலையில், தாலி அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அரவாணிகள் கூவாகத்தில் குவிந்தனர்.
நேற்று முன்தினம் காலை மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடந்தது. இதில் சேலம் மந்த்ரா மிஸ் கூவாகம் ஆக தேர்வு செய்யப்பட்டார். இரவில் அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டினார்.
அதன் பின்னர் அரவாணிகள் அனைவரும் இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருந்தனர். யாருமே தூங்கவில்லை. இரவு முழுவதும் ஜாலியாக பொழுதைக் கழித்தனர்.
பின்னர் நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. அதன் பின்னர் தாலி அறுப்பு நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1.30 மணியளவில் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலுக்கு தேர் சென்றடைந்து அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடனே அரவாணிகள் தங்களது கைகளில் இருக்கும் வளையல்களை உடைத்து நொறுக்கினர். தாலிகளை அறுத்தெரிந்தனர். தங்கத்தாலிகளை கோவில் நிர்வாகிகளிடம் அரவாணிகள் கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கிணறுகளுக்கு சென்று தலையில் வைத்துள்ள பூக்களை பிய்த்தெறிந்து கிணற்றில் தலை மூழ்கி வெள்ளாடை அணிந்து விதவை கோலம் பூண்டனர்.
இரவு 7 மணிக்கு அரவாணிகள் உயிர்ப்பித்தல் என்ற ஐதீகம் ஏரிக்கரை காளி கோவிலில் நடைபெற்றது. பின்னர் மீண்டும் பந்தலடிக்கு தேர் கொண்டு வரப்பட்டது.
இன்று விடையாற்றி உற்சவமும், நாளை தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. இத்துடன் இந்த ஆண்டுக்கான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.