துரைமுருகனின் 'லேகியப்' பேச்சு - சட்டசபையில் கலகலப்பு!
சென்னை: சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், சாலையோரம் லேகியம் விற்பவர் போல பல வகை நோய்கள் மற்றும் அதற்கான மருந்துகள் குறித்து நீட்டிப் பேசியதால் சட்டசபையில் கலகலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் நேற்று திருவண்ணாமலை எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி கேட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
அப்போது வேலூர் எம்.எல்.ஏ ஞானசேகரன் துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். குறிப்பிட்ட வகை எண்ணை, லேகியதத்தால் பித்த நரை, முடி உதிர்வது போன்றவை நிற்குமா என்றார் ஞானசேகரன்.
அப்போது எழுந்த அமைச்சர் துரைமுருகன், பிதாமகன் படத்தில் சூர்யா பல வகை நோய்களை நீட்டிப் பேசுவது போல, கர்ப்பசூடு, தலை சுற்றல், பொடுகு, மண்டக்குத்து, அஜீரணம், வாந்தி, பேதி, வாதம், கபம் என்று கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட நோய்களை வரிசையாகக் கூறினார்.
எல்லாவற்றையும் கூறி முடித்து கடைசியாக, புகையிலைப் பழக்கம் இல்லையென்றால் இவையெல்லாம் வராது என்று கூறி அமர்ந்தார். சாலையோர லேகிய வியாபாரி போல துரைமுருகன் பேசியது சபையில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது.