ஆந்திர இடைத்தேர்தல்- தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதிக்கு பெரும் சரிவு
ஹைதராபாத்: ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் நடந்த மக்களவை-சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கரீம்நகர் மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலை விட மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தெலுங்கானா பகுதியில் உள்ள 4 நாடாளுமன்ற, 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடந்தது.
கடந்த மக்களவை-சட்டமன்றத் தேர்தல்களில் தனி தெலுங்கானா கோரி வரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தான் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், தனி தெலுங்கானாவை உருவாக்குவதாக உறுதியளித்து இந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்று மத்தியில் ஆட்சியில் அமைந்த காங்கிரஸ் பின்னர் பல்டியடித்துவிட்டது. இதையடுத்து இக் கட்சியின் 4 எம்பிக்களும், 16 எம்எல்ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
மேலும் இரு தொகுதிகளில் ஒரு காங்கிரஸ், ஒரு தெலுங்கு தேசம் எம்எல்ஏ ஆகியோர் இறந்துவிட்டனர். இதையடுத்து அனைத்திற்கும் சேர்த்து கடந்த மாதம் 29ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
இந்த இடைத் தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதில் கரீம் நகர் மக்களவை தொகுதியில் டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் மீண்டும் வெற்றி பெற்றார். அவரது கட்சி 5 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது. இரு இடங்களில் அக் கட்சி வேட்பாளர்களே முன்னணியில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 3 சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 இடங்களில் அந்தக் கட்சியே முன்னணியில் உள்ளது.
தெலுங்கு தேசம் 3 தொகுதிகளில் வென்றுள்ளது. மேலும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
டிஆர்எஸ், காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவை தலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னணியில் உள்ளன.
இதன் மூலம் டி.ஆர்.எஸ். தன் வசமிருந்த 5 எம்எல்ஏ தொகுதிகளை காங்கிரஸ், தெலுங்கு தேசத்துடன் இழந்துள்ளது.
மேலும் அக் கட்சியிடமிருந்த 4 எம்பி தொகுதிகளில் இரண்டை காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவை கைப்பற்றவுள்ளன.