சட்டசபையில் உரையாற்ற கர்நாடக ஆளுநர் மறுப்பு
பெங்களூர்: கர்நாடக சட்டசபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்த ஆளுநர் ராமேசுவர் தாகூர் மறுத்து விட்டார். முதலில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு முதல்வர் எதியூரப்பாவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் அல்லது புதிய அரசு பதவி ஏற்கும்போது சட்டபை கூடும் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம்.
கர்நாடகத்தில் சட்ட மேலவையும் உள்ளதால் புதிய அரசின் முதல் கூட்டம் சட்டசபை-மேலவையின் கூட்டுக் கூட்டமாக நடத்தப்பட்டு ஆளுநர் உரையாற்றுவது வழக்கம்.
அந்த வகையில் எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து வரும் 4ம் தேதி சட்டசபை கூடுகிறது. 5ம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது. 6ம் தேதி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந் நிலையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதாலும், புதிய அரசு பதவி ஏற்றுள்ளதாலும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு கவர்னர் ராமேசுவர் தாகூருக்கு முதல்வர் எதியூரப்பா கோரிக்கை விடுத்தார்.
நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை அவர் வைத்தார். ஆனால், அதை கவர்னர் நிராகரித்து விட்டார். இது குறித்து கவர்னர் ராமேசுவர் தாகூர் கூறுகையில், பாஜக அரசு முழு பலத்துடன் பதவி ஏற்கவில்லை. சுயேச்சைகளின் ஆதரவுடன் தான பதவிக்கு வந்துள்ளது. இதனால் முதலில் சட்டசபையில் அரசு தனது மெஜாரிட்டியை அரசு நிரூபிக்க வேண்டும். அதன்பிறகு தான் சட்டசபையில் உரை நிகழ்த்த முடியும் என்றார்.
கவர்னரின் இந்த செயல் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
ஷெட்டாருக்கு பதவி இல்லை?
இதற்கிடையே எதியூரப்பாவின் எதிர்ப்பாளரும் முன்னாள் கர்நாடக பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டாருக்கு அமைச்சர் பதவி தருவதில்லை என்ற முடிவில் எதியூரப்பா தீவிரமாக உள்ளார்.
இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸசின் ஆதரவையும் எதியூரப்பா பெற்றுவிட்டார். நேற்று பெங்களூரில் உள்ள கர்நாடக ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்ற அவர் 4 மணி நேரம் அதன் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஷெட்டாரை அமைச்சரவையில் சேர்த்தால் தனது பதவிக்கு வேட்டு வைப்பார், ஆட்சியை நிலை குலைய வைப்பார் என்று எதியூரப்பா அச்சம் தெரிவித்தார். இதையடுத்து எதியூரப்பாவின் கருத்தை ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைமை ஏற்றுக் கொண்டது.
அதே நேரத்தில் தாங்கள் சொல்லும் ஒரு நபருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்சின் கோரிக்கையை எதியூரப்பா ஏற்றுக் கொண்டார்.
அதே போல தனது இன்னொரு எதிர்ப்பாளரான அனந்த்குமாரையும் எதியூரப்பா வளைத்துவிட்டார். விஎச்பி-ஆர்எஸ்எஸ்சின் முழு ஆதரவு பெற்ற அனந்த்குமாரின் ஆதரவாளர்கள் பலரும் இந்தத் தேர்தலில் வென்றுளளனர். அவர்களில் பலரையும் அமைச்சராக்கிவிட்டார் அனந்த்குமார்.
இப்போது தனது ஆதாரவாளர்களுக்கு முக்கியமான கேபினட் பதவிகளைப் பிடித்துத் தரும் வேலையில் தீவிரமாக உள்ளார். இதனால் எதியூரப்பாவுடன் அவர் சமாதானக் கொடியை பறக்க விட்டுள்ளார். இதனால் ஷெட்டார் விஷயத்தில் எதியூரப்பா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனந்த்குமார் தரப்பு கூறிவிட்டது.
தேர்தலுக்கு முன்பும் எதியூரப்பா-அனந்த்குமார் தரப்பினர் தனித் தனி கோஷ்டியாகவே அரசியல் நடத்தி வந்தனர். இதனால் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக வந்த மூத்த பாஜக தலைவர் அருண் ஜேட்லி முதலில் செய்த காரியம், இந்த இருவரையும் அழைத்துப் பேசி இணைந்து செயல்பட வைத்தது தான் பாஜகவின் வெற்றிக்கு முழுக் காரணமாக அமைந்தது.
இப்போது எதியூரப்பா முதல்வராகிவிட்ட நிலையில் அனந்த குமாரின் ஆதரவாளர்கள் தான் பெரும்பாலும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். யாருக்கு எந்தத் துறை என்பதிலும் அனந்த்குமார் தரப்புக்கு விட்டுக் கொடுத்து போகும் நிலையில் எதியூரப்பா உள்ளார்.
இப்போதே துறைகளை ஒதுக்கிவிட்டால் இதனால் சிக்கல் எழும், தனால் மெஜாரிட்டியை நிரூபிக்கும்போது பிரச்சனை வரலாம் என எதியூரப்பா அஞ்சுகிறார்.
இதனால் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டாலும் இன்னும் அவர்களுக்கு துறைகளை ஒதுக்காமல் இருந்து வருகிறார். மெஜாரிட்டியை நிரூபித்த பின்னரே துறைகளை எதியூரப்பா ஒதுக்குவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மெஜாரிட்டி வாக்கெடுப்பு, யாருக்கு எந்தத் துறை என்பது குறித்து மத்திய தலைவர்களுடன் விவாதிக்க இன்று எதியூரப்பா டெல்லி கிளம்பிச் சென்றார்.
மூத்த தலைவர்களுடன் அவர் ஷெட்டார் விவகாரம் குறித்தும் பேசுவார். ஷெட்டாரை சபாநாயகராக்க எதியூரப்பா முயல்கிறார். ஆனால், அதை ஷெட்டார் ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.