மும்பை: ஐபிஎல் போட்டித் தொடரிலேயே அரை இறுதியில் தோற்றதுதான் மிகவும் மோசமான நாளாகும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் கூறியுள்ளார். மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் 2வது அரை இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணி தோல்வியுற்றது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் யுவராஜ் சிங் பேசுகையில், எங்களது அணியின் பேட்ஸ்மென்கள் மிகவும் மோசமாக ஆடியதே தோல்விக்கு முக்கிய காரணம். மேல் வரிசை ஆட்டக்காரர்களை நாங்கள் விரைவாக இழந்து விட்டோம். டுவென்டி 20 போட்டிகளில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தால், மீள்வது கடினம். அதேபோல சென்னை அணியின் விக்கெட்டுகளையும் எங்களால் வீழ்த்த முடியவில்லை. அதைச் செய்திருந்தாலாவது ஆட்டத்தில் கொஞ்சம் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். இந்தப் போட்டித் தொடரில் ஒட்டுமொத்தமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. ஆனால் அரை இறுதியில் நாங்கள் சரியாக ஆடவில்லை. நாங்கள் போராடவில்லை. பிட்ச்சை நான் குற்றம் சாட்டவில்லை. அது நல்ல விக்கெட்தான். முதலில் ஆடும் அணியால் 160 முதல் 180 ரன்கள் வரை எடுக்க முடியும். ஆனால் விரைவில் விக்கெட்களை இழந்ததால் நாங்கள் தோல்வி அடைய நேரிட்டு விட்டது. மொத்தத்தில் இந்த நாள் எனக்கு ஒரு மோசமான நாள் என்றார் யுவராஜ் சிங். உடன் இருந்த பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில், யுவராஜ் சிங் சொல்வதைப் போல இது மோசமான நாள் என்பதில் சந்தேகம் இல்லை. திட்டமிட்டபடி எங்களது பேட்ஸ்மென்கள் ஆடவில்லை. விரைவிலேயே விக்கெட்களை இழந்து விட்டோம். இதனால் எங்களால் மீள முடியவில்லை. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். போட்டித் தொடர் முழுவதும் அந்த அணி சிறப்பாக ஆடி வருகிறது. கேப்டனாக ஷேன் வார்னே சிறப்பாக செயல்படுகிறார். தனது அணியினரின் திறமைகளை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி விளையாட வைக்கிறார். ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வார்னவேவின் செயல்பாடுகள்தான் காரணம். அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. அதுவும் அபாயகரமான அணிதான். இருப்பினும் ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு அதிகம் என்பது எனது எண்ணம் என்றார் அவர்.