நாளை திமுக பொதுக்குழு கூடுகிறது
காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இதற்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
இதி்ல் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட அவைத் தலைவர்கள்,
ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள், மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 480 பேர் உள்பட மொத்தம் 1,820 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் அண்ணா நூற்றாண்டு விழா, கட்சியின் அமைப்பு தேர்தல், கட்சியில் உள்ள பிரச்சனைகள், மக்கள் நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுவதோடு, கட்சியின் வரவு-செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து திமுக பிரமுகர்கள் தொண்டர்களுடன் சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சில காலமாகவே திமுகவுக்குள் ஒரு மெளன யுத்தம் நடந்து வருவதாகக் கிசுகிசுக்கப்படுகிறது. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கோரியும், திமுகவில் மு.க.அழகிரிக்கு முக்கியப் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும், கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தர வேண்டும் என்றும் முதல்வருக்கு பல முனைகளிலிருந்து குறிப்பாக குடும்பத்திலிருந்து நெருக்குதல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான மு.க.ஸ்டாலின், திடீரென கிளம்பி பெங்களூர் சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பிவிட்டார்.
இந்தச் சூழலில்தான் நாளை காலை திமுக பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது.