நம்பிக்கை தலைவர் கருணாநிதி: அன்பழகன்
சென்னை: தமிழர்களின் நம்பிக்கைக்குரிய ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்று நிதியமைச்சர் க.அன்பழகன் கூறியுள்ளார்.
கலைஞர்-85 கொண்டாட்டம் என்ற பெயரில் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை தாங்கினார்.
விழாவில் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பேசுகையில், சுயமரியாதை அடிப்படையில் மக்களுக்கு சரியான பாதையை வகுத்து கொடுத்தவர் பெரியார். அந்த அடிப்படையில் அண்ணாவின் வழியில் தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்தை முதல்வர் கருணாநிதி காப்பாற்றி வருகிறார்.
முற்போக்கு சிந்தனைகளை அண்ணா பின்பற்றியதுபோல, கலைஞர் பின்பற்றி வருகிறார். தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் கருணாநிதியே தவிர, வேறு யாரும் இல்லை.
திராவிட இயக்கக் கொள்கைகள் அவர் மூலம் காப்பாற்றப்பட்டு வருகின்றன. நம்மிடம் சாதி ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.
மதவெறியில் இருந்து மனிதன் விடுபடவில்லை. மனிதநேயத்தை வளர்க்கவில்லை. பல்வேறு சீர்திருத்த அழிவிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மனிதன் முன் வரவில்லை.
பெரியார், அண்ணாவின் கொள்கைகளை பரப்புவது நமது கடமை.
இந்த கொள்கைகளை கருணாநிதி காப்பாற்றி வருகிறார். அவரது பிறந்த நாளை கொள்கைக்காகதான் நாம் கொண்டாடுகிறோம். கருணாநிதி பல்லாண்டு காலம் வாழ வேண்டும். பெரியாரை விட, கலைஞர் அதிக ஆண்டுகள் வாழ வேண்டும் என்றார் அன்பழகன்.
மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள் என்று எல்லோரும் கொண்டாட்டமாக தான் இருக்கிறார்கள். ஆனால், தனது 85வது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவித்தார்.
ஜூன் 3ம் தேதி திமுகவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் கொண்டாடும் விழா என்பதால் முதல்வர் கருணாநிதி, இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
இதன் பின்பு, பிறந்தநாளை கொண்டாடுவோம் என்று அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்தார். இதை முதல் அமைச்சரால் தடுக்க முடியவில்லை.
கருணாநிதிக்கு விழா எடுப்பது நமக்கு நாமே விழா எடுப்பது போன்றதாகும். பல மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தனது 85வது வயதிலும் மொழி, இனம், சமுதாயத்திற்காக 20 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைக்கிறார் என்றார் ஆற்காடு.
பின்னர் கருணாநிதியின் சாதனை விளக்க பாடல்கள் அடங்கிய சிடியை அன்பழகன் வெளியிட, முதல் பிரதியை பரிதி இளம்வழுதி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. அதை கருணாநிதி மிகவும் ரசித்துப் பார்த்தார்.