நீதிபதி முன்னிலையில் வக்கீல் மீது தாக்குதல்
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நீதிபதி முன்னிலையில் வக்கீலை, சில வக்கீல்கள் தாக்கினர்.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம் உள்ளது. இங்கு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உள்ளது.
தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் கலைவாணிக்கு எதிராக கடந்த 19ம் தேதி முதல் இங்கு வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாஜிஸ்திரேட் கலைவாணி, வக்கீல்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நீதிமன்றப் புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஒரு வழக்கில், வக்கீல் மனோகரன் என்பவர் நீதி மன்றத்தில் அரசு தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அங்கு வந்த வக்கீல்கள் சிலர், மனோகரன் விசாரணையில் ஆஜராகக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்கு மனோகரன் ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து 12 வக்கீல்கள் சேர்ந்து மனோகரனை தாக்கினர். நீதிபதி முன்பாகவே வக்கீல் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக வக்கீல்கள் நடராஜன், கிருஷ்ணகுமார், செல்வம் உள்பட 15 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.