சாராய வேட்டை- எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாராய வேட்டைக்கு சென்ற எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ளது கொன்னைகாடு.
இந்த கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதனையடுத்து எஸ்.ஐ. கலியபெருமாள் தலைமையில் மது விலக்கு போலீசார் கொன்னைகாடு சென்றனர். அங்கு பெண் சாராய வியாபாரி பூமதி என்பவர் வீட்டிற்குள் சோதனை நடத்த சென்றனர்.
அப்போது அங்கிருந்த பூமதியின் மருமகன் வீரமணி, உறவினர் சுரேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, வீரமணி, எஸ்.ஐ. கலியபெருமாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் எஸ்.ஐ. கலியபெருமாள் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுமார் 10 க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டது.
தகவல் அறிந்த எஸ்.பி. மூர்த்தி, டி.எஸ்.பி. அதிவீரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மற்றும் அதிரடிப்படை போலீசார் ஆகியோர் கொன்னைகாடு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர் போலீசார் வருகையை முன் கூட்டியே தெரிந்து கொண்ட பூமதி, வீரமணி, சுரேஷ் ஆகியோர் தப்பி ஒடிவிட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.