மத்திய அரசு-இடதுசாரிகள் மோதல் தீவிரம்: இடைத் தேர்தலுக்கு வாய்ப்பு
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடாது என்று இடதுசாரிக் கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. அதேசமயம், இடதுசாரிகளின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இக்கூட்டத்தில் எப்படியாவது இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்று விட மத்திய அரசு மும்முரமாக இருந்தது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் தலைவர்கள் சீதாரம் எச்சூரியை சோனியா காந்தி சந்தித்துப் பேசினார். பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்ைத சந்தித்துப் பேசினார்.
நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்தை இரு முறை சந்தித்துப் பேசினார்.ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு விட்டது. ஜூன் 25ம் தேதி மீண்டும் கூடிப் பேச தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதவி விலக மன்மோகன் விருப்பம்:
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது அணுசக்தி ஒப்பந்தத்ைத எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், அதன் அவசியத்தையும் அவர்எடுத்துரைத்துள்ளார்.
இடதுசாரிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இந்த ஒப்பந்தத்ைத நிறைவேற்றிட வேண்டும். அப்படி இதை நிறைவேற்ற மத்திய அரசு தயங்கினால் எனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்றும் பிரதமர் கூறியதாக தெரிகிறது.
ஆனால் பிரதமரின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த சோனியா காந்தி, அணு சக்தி ஒப்பந்தத்ைத நிறைவேற்றுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இடது சாரித் தலைவர்கள் தனியாக கூடி அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆலோசித்தனர். இக்கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தத்ைத நிரந்தரமாக மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என்ற தங்களது நிலையில் எந்தமாற்றமும் இல்ைல என்ற முடிவை எடுத்துள்ளனர்.
மத்திய அரசும் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற உறுதியாகஉள்ளது. இடதுசாரிகளும் பிடிவாதமாக உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே பேசாமல் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு இடைத் தேர்தலுக்கு போய் விடலாமா என்ற யோசனைக்கு காங்கிரஸ் கட்சி வந்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துள்ளதும் இடைத் தேர்தலுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் பரபரப்பான நிகழ்வுகள் டெல்லியில் இடம் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.