நளினி மனுவுக்கு விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளக் கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இதை எதிர்த்து நளினி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த வழக்கில் தமிழக அரசின் நிலை என்ன என்பது குறித்து அரசு வக்கீல் அருணிடம் நீதிபதி சரமாரியாக
கேள்விகள் கேட்டார்.
நீதிபதி: சுப்ரமணியம் சுவாமியின் மனுவுக்கு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதா?
வக்கீல் அருண்: இதுவரை தாக்கல் செய்யவில்லை.
நீதிபதி: சுவாமியின் மனு மீது பதில் மனு தாக்கல் செய்கிறீர்களா?
அருண்: இன்னும் முடிவு செய்யவில்லை.
நீதிபதி: அப்படியானால் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? சுவாமியின் மனுவை ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா?
அருண்: ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை.
நீதிபதி: அப்படியானால் நடுநிலை வகிக்க விரும்புகிறீர்களா?
அருண்: ஆமாம்.
நீதிபதி: இதனை பதிவு செய்து கொள்ளட்டுமா?
அருண்: வேண்டாம். அரசு தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) இந்த வழக்கில் பிற்பகல் ஆஜராகி வாதிட உள்ளார் என்று தெரிவித்தார்.
அப்போது நளினி சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் துரைசாமி, சுப்பிரமணிய சுவாமியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அதன் மீது எங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். பிரதான மனு மீதான விசாரணையை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்றார்.
இந்த நிலையில், சுவாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால்,
சுவாமி தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு எதிர்க்காது. ஏனெனில், அரசுக்கு ஆதரவாகத்தான் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
அப்போது வக்கீல் துரைசாமி, சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு மீது சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. எனவே இது குறித்து தமிழக அரசு தனது நிலைப் பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தார். அதற்குள் அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.