வட, கிழக்கு மாநிலங்களில் கன மழை - ரயில்கள் ரத்து
சென்னை: வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னையிலிருந்து செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் மற்றும் கிழக்கில் உள்ள மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தா நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக இந்த மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
பல ரயில் தண்டவாளங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதன் காரணமாக சென்னையிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கான ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளு.
நேற்று சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து ஒரிசா வழியாககொல்கத்தா செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல இன்று செல்ல வேண்டிய பெங்களூர் - குவஹாத்தி எக்ஸ்பிரஸ், ஜஸ்வந்த்பூர்- முசாபர்பூர் எக்ஸ்பிரஸ், ஜஸ்வந்த்பூரிலிருந்து கோரக்பூருக்கு காட்பாடி வழியாக செல்லும் ரயில், சாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சாலிமாரிலிருந்து - நாகர்கோவிலுக்கு காட்பாடி வழியாக 20ம் தேதி செல்லும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்தாகியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்குரிய டிக்கெட்டை கேன்சல் செய்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக சென்டிரல் நிலையத்தில் நான்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு 044-25357393, 25347277 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
--