பாஜகவுடன் பாமக கூட்டணி அமைக்கலாம்: திருநாவுக்கரசர்
சென்னை: பாஜகவும், பாமகவும் இணைந்து கூட்டணி அமைக்கலாம். அந்தக் கூட்டணிக்கு பாஜக தயாராக உள்ளது என்று பாஜக தேசிய செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற்றப்பட்டுள்ளது. திமுகவின் இந்த செயல் அதிர்ச்சியை அளிக்கவில்லை என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே இரண்டு தேர்தல்களில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்று ஆட்சியிலும் பங்கேற்றுள்ளது. எனவே பாமகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து பேசுவோம்.
திமுகவுக்கும், பாமகவுக்கும் நேற்று இரவுதான் விவாகரத்து ஏற்பட்டுள்ளது. மறுமணம் குறித்து முடிவு செய்வதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். பாஜகவை பொறுத்தவரையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தவிர வேறு எந்த கட்சியும் தீண்டத்தகாத கட்சி அல்ல.
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து விஜயகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. விலைவாசி உயர்வு பிரச்சனை அல்லது இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக்கிக்கொள்ளும்.
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சதீஷ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான அலை வீசி வருகிறது. அதே நேரம் பாஜகவுக்கு சாதகமான நிலை உள்ளது. எனவே தேர்தல் எப்போது நடந்தாலும் பாஜக வெற்றி பெற்று அத்வானி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து சதி செய்ததன் காரணமாகவே புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் இடம்பெறாமல் போய்விட்டது.
இதைக் கண்டித்து வரும் 27ந் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
ராமர் இல்லை என்று கூறி வந்த கருணாநிதி, தற்போது இத்திட்டத்திற்கு சேதுராம் என பெயர் சூட்டலாம் என்று கூறியிருப்பது அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது. இது வரவேற்கத்தக்கது
சேது சமுத்திர திட்டத்திற்கு பாஜக எதிரானதல்ல. மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறி வருகிறோம் என்றார் திருநாவுக்கரசர்.