பாமக போனதால் திமுகவுக்கு இழப்பு ஏற்படும்: திருமாவளவன்
மதுரை: திமுக கூட்டணியிலிருந்து பாமகவை விலக்கியுள்ளதால், திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும். இரு கட்சிகளும் மீண்டும் கை கோர்க்க வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் பேசுவேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை வந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமகவுடன் கூட்டணி இல்லை என்று திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழு அறிவித்திருப்பது, திமுகவுக்கும், திமுக கூட்டணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த முடிவால் பாமகவுக்கு இழப்பு என்று சிலரும், திமுகவுக்கு இழப்பு என்று சிலரும் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால் நாங்கள் வேதனைப்படுகிறோம்.
மத வெறி சக்திகளும், திரைப்பட மாயையை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழக நலனைப் பாதுகாக்க திமுக கூட்டணி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த நெருக்கடி திமுகவுக்கு விரும்பத்தகாதது ஆகும். குடும்பத்தில் ஏற்படும் பிணக்கைப் போல இதனைக் கருதி, திமுகவும், பாமகவும், மறப்போம், மன்னிப்போம் என்ற அணுகுமுறையில் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஓரிரு நாட்களில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வேண்டுகோள் விடுப்பேன்.
மத்தியில் பாமகவுக்கு எதிர்நிலையை திமுக எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் அன்புமணி மீது அன்பு உண்டு என்று முதல்வர் கூறியுள்ளதன் மூலம், கூட்டணியில் உறவு இல்லையேதவிர,கூட்டுறவில் அல்ல என்பதை உணர முடிகிறது.
கூட்டணியை வலிமைப்படுத்த திமுகவும், பாமகவும் கடந்த காலகசப்புணர்வுகளை மறந்து மீண்டும் கைகோர்க்க வேண்டும் என்று தோழமை அடிப்படையில் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் அவர்.