அமைச்சரவையில் காங்.குக்கு இப்போதாவது இடம் கிடைக்குமா?
சென்னை: திமுக கூட்டணியில் பாமக நீக்கப்பட்டு விட்ட நிலையில், தங்களது முழு ஆதரவும் திமுகவுக்கு தேவை என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இப்போதாவது தங்களுக்கு திமுக அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸார் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக அரசியல் சூழ்நிலையில் கண்டிப்பாக மாற்றம் வரும் என்று சமீபகாலமாகவே எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இதற்கு திமுக பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
பெரிய அளவில் குடைச்சல் கொடுத்து வந்த பாமகவை அதிரடியாக கூட்டணியிலிருந்து விலக்கியுள்ளது திமுக. இந்த நிலையில், அடுத்தடுத்து என்ன நடக்கும், யார்யாருடன் கூட்டணி சேருவார்கள், பாமக எங்கு போகும், அந்தக் கட்சியை அரவணைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்புகள், அது தொடர்பான ஹேஷ்யங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் வட்டாரத்தில் வேறு ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் பதவி கேட்டு அணத்தி வருகிறது காங்கிரஸ். ஆனால் அதற்கு அணை போட்டு வைத்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
முக்கிய கட்சியான பாமகவை அணியை விட்டு நீக்கி விட்ட திமுகவுக்கு, தற்போது காங்கிரஸ் கட்சியின் முழுமையான ஆரவு அவசியம் தேவை என்ற நிலை. இதை பயன்படுத்தி அமைச்சர் பதவி கேட்டு திமுகவை நெருக்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது.
தற்போது காங்கிரஸின் தயவு திமுகவுக்கு மிக மிக முக்கியம். காங்கிரஸைப் பகைத்துக் கொள்ள திமுக விரும்பாது. எனவே இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அமைச்சர் பதவி கேட்டு திமுகவை நெருக்க வேண்டும் என காங்கிரஸில் ஒரு பிரிவினர் கூற ஆரம்பித்துள்ளனராம்.
ஆனால் ஏற்கனவே பிளாக்மெயில் பாலிட்டிக்ஸ் செய்து வந்ததால்தான் பாமகவை அணியை விட்டே அதிரடியாக நீக்கியது திமுக. அப்படி இருக்கையில், காங்கிரஸ் கட்சியும் மிரட்டல் அரசியலில் இறங்கினால், அதற்குப் பணிவதற்குப் பதில் தேர்தலை சந்திக்கவும் திமுக தயங்காது என்ற கருத்தும் நிலவுகிறது.
இதுவரை கேட்டு கிடைக்காதது, இப்போதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளது காங்கிரஸ். ஆனால் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் ஆழ்ந்துள்ளது.