நக்சலைட் சுட்டு படகு கவிழ்ந்தது - 40 வீரர்கள் பலியானதாக அச்சம்
மல்கன்கிரி (ஒரிசா): ஒரிசா மாநிலம் மலிகுடா அருகே அணைக்கட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த படகை நோக்கி நக்சலைட்டுகள் சரமாரியாக சுட்டனர். இதில் படகு உடைந்து நீரில் மூழ்கியது. இந்த பயங்கர சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து வந்த ராணுவ வீரர்கள், மலிகுடா பகுதியில் உள்ள சித்ரகொண்டா அணைக்கட்டுப் பகுதியில் படகில் பயணம் செய்தனர்.
அப்போது திடீரென நக்சலைட்டுகள் அங்கு வந்து படகை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் படகு கவிழ்ந்தது. அதில்இருந்த 40க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கிப் போய் விட்டனர்.
8 பேர் நீந்திக் கரை சேர்ந்து விட்டனர். அவர்கள் மல்கன்கிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடம் தொலைதூரத்தில் இருப்பதால் உடனடியாக அங்கு போக முடியாமல் மீட்புப் படையினர் தடுமாறி வருகின்றனர்.
நக்சலைட்டுகளை வேட்டையாடிப் பிடிப்பதற்காக மேற்கு விசாகப்பட்டனத்திலிருந்து இந்த ராணுவ வீரர்கள் ஒரிசாவுக்கு வந்திருந்தனர்.