கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி மகள் மரணம்
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணியின் மகள் புஷ்பா புற்று நோயால் மரணமடைந்தார். முதல்வர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணியின் மகள் புஷ்பா. இவருக்கு கணவர் ரவிக்கண்ணன், 2 மகன்கள் உள்ளனர்.
48 வயதான புஷ்பா ராயப்பேட்டை பொன்னுச்சாமி தெரிவில் வசித்து வந்தார். புஷ்பாவுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நோய் முற்றியது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார்.
நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பா மரணமடைந்தார். தகவல் அறிந்ததும் முதல்வர் கருணாநிதி புஷ்பாவின் வீட்டுக்கு விரைந்து சென்றார். அவரது மகன் தீபக்கிடம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
முதல்வர் சார்பில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று புஷ்பாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள மேக்கிரிமங்கலத்தில் இன்று புஷ்பாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.