சேலத்தில் தேமுதிகவினர் மீது சிபிஐ தொண்டர்கள் தாக்குதல்
சேலம்: சேலத்தில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் புகுந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், தொண்டர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். போலீஸார் தடியடி நடத்தி தேமுதிகவினரைக் கலைத்தனர்.
சேலம் குகைப் பகுதி 59வது வட்ட தேமுதிக சார்பில் சிவசக்தி நகரில் நேற்று இரவு கட்சி கொடியேற்று விழா மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டமும் நடந்தது.
அதில் பேசியவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதே பகுதியில் வசித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ரமணி வீட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூடினர்.
பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து தேமுதிகவினர் கூட்டத்திற்குள் புகுந்தனர். அங்கிருந்த தேமுதிகவினரை செருப்பால் அடித்தும், நாற்காலிகளை தூக்கி வீசியும் தாக்கினர். இதனால் அங்கு போர்க்களம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது.
தேமுதிகவினரும் திருப்பித் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.டியூப் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன. உடனடியாக போலீஸார் தடியடி நடத்தி தேமுதிகவினரை விரட்டினர். ஆண், பெண் என்று பாராமல் போலீஸார் தடியடி நடத்தியதால் அந்தப் பகுதியே பெரும் கலவர பூமி போல காட்சி அளித்தது.
இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். போலீஸ் தரப்பில் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் விரட்டியடிக்கப்பட்ட தேமுதிகவினர் அன்னானப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலரை பிடித்துச் சென்றுள்ளனர்.