For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களது தலைமையில் 3வது அணி: சரத்குமார் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Sarath kumar
சென்னை: திமுக மற்றும் அதிமுக அல்லாத புதிய மூன்றாவது அணியை எனது தலைமையில் உருவாக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தனது 54-வது பிறந்த தின விழாவை இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடினார் சரத்குமார்.

வேளச்சேரி பகுதி செயலாளர் சி.உதயகுமார் ஆட்டுக்குட்டி ஒன்றை சரத்குமாருக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார்.

பின்னர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சி வேறுபாடுகளை மறந்து பாஜக மாநில தலைவர் இல.கணேசன், பொன்.ராதா கிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஞானதேசிகன் எம்.பி., எஸ்.வி. சேகர் எம்எல்ஏ மற்றும் கலை உலகினர் எனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது இன்றைய அரசியல் சூழ்நிலையில் நல்ல பண்பாடாக இருக்கிறது.

நாளை சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழா திருப்பூரில் நடைபெறுகிறது.

மக்களுக்கு தொலைநோக்கு பார்வையுடன் அடிப்படை வசதிகள், சமச்சீர் கல்வியை கொடுப்பதோடு, வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதுதான் எங்களின் நோக்கம்.

மக்கள் பார்த்துக்கிட்டிருக்காங்க. அவர்களை ஏமாற்ற முடியாது. சினிமாவில் வேண்டுமானால் நடிக்கலாம். அரசியலில் நடிக்க முடியாது.

இலங்கைப் பிரச்சினை

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் துன்புறுத்தி வருகிறது. இதற்காக நாங்கள் இலங்கை தூதரகத்திடம் மனு கொடுத்துள்ளோம். தமிழகத்தின் அருகில்தான் இலங்கை இருக்கிறது. அதனால் முதலில் அங்கு அமைதி திரும்ப வேண்டும்.

தமிழக முதலமைச்சர், இலங்கையில் அமைதி நிலவ முயற்சி செய்ய வேண்டும். இந்தியா, இலங்கைக்கு ஆயுதம் அனுப்ப கூடாது. இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்தால் உடனே விடுதலை செய்து விடுகிறார்கள். ஆனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடித்து துன்புறுத்துகிறார்கள். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

மக்களுக்கு சிறப்பான நல்லாட்சி மத்தியிலும், மாநிலத்திலும் உருவாக்க முயற்சி செய்வோம். அணுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் காங்கிரசுக்கு நாங்கள் ஆதரவு என்று நினைக்க வேண்டாம்.

ஒகேனக்கல் திட்டம்...

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அலுவலகம் திறந்து அதிகாரிகளை நியமித்தால் மட்டும் இத்திட்டம் நிறைவேறும் என்று நினைக்கக்கூடாது. தமிழக முதல்வர் இத்திட்டம் குறித்து எடியூரப்பாவை நேரில் சந்தித்து திட்டம் நிறைவேற பேச வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தவறினால் போராட்டம் நடத்துவோம் என்று பாமக அறிவித்துள்ளது. அவர்களுடன் சேர்ந்து நாங்களும் அத்திட்டத்திற்காக போராட்டம் நடத்துவோம்.

22 வேட்பாளர்கள் ரெடி

நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்பொழுதே 22 வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டோம். நாங்கள் ஒத்தக்கருத்துடைய ஒரு அணியை உருவாக்குவோம்.

திமுக, அதிமுக அல்லாத ஒரு அணி என் தலைமையில் உருவாகும்.

என் தலைமையிலான புதிய அணியில் ஒருமித்த கருத்துள்ள தலைவர்கள் இணைவார்கள். அவர்கள் யார் யார் என்பதையெல்லாம் பின்னர் சொல்கிறேன் என்றார் சரத்.

மனைவி ராதிகா சரத்குமார், கட்சியின் துணை தலைவர் ஏ. நாராயணன், அவைத் தலைவர் முருகன், அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் பிரைட் ஜோசப், சுந்தரேசன், தலைமை நிலைய செயலாளர் ஜெயபிரகாஷ், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஜே. நாதன், வேளச்சேரி பகுதி செயலாளர் சி.உதயகுமார், பகுதி இளைஞரணி செயலாளர் சி. மகேஸ்வரன், கொட்டிவாக்கம் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X