நக்சல் கண்ணிவெடியில் சிக்கி 4 போலீஸார் பலி
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 போலீஸார் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சட்டீஸ்கர்-ஜார்கண்ட் மாநிலங்களின் எல்லை பகுதியில் உள்ள ஜுன்ஜுனா கிராமத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸார் இணைந்து நக்ஸலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் 2 மணியளவில் சம்ரி என்ற இடத்தில் இருந்து குஸ்மி என்ற இடத்துக்கு ஜீப்பில் சிஆர்பிஎப் போலீஸார் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நகஸல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சிக்கி 4 போலீஸார் பரிதாபமாக இறந்தனர். 6 போலீஸார் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த போலீஸார் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 29ம் தேதி நாராயண்பூர் மாவட்டத்தில் நகஸல்கள் வைத்தி கண்ணி வெடியில் சிக்கி 6 மத்திய ரிசர்வ் படை போலீஸார் இறந்தனர். தற்போது மீண்டும் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.