சோனியா-சிதம்பரம் வந்த விமானத்தில் 'என்ஜின் ஆப்'!
பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவைக்கு வந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.
முன்னதாக மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், என்ஜினில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லியில் இருந்து ஜிம்ஆர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் ரக தனி விமானத்தில் சோனியாவும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கோவை வந்தனர்.
பெங்களூரில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் ஒரு பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய விமானி, உடனே விமானத்தை பெங்களூர் சர்வதேச விமான நிலையகத்துக்கு திருப்பினார்.
சோனியாவின் விமானம் ஒரு என்ஜினுடன் அவசரமாக தரையிறங்குவதால் பெங்களூர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. இதையடுத்து ஜிஎம்ஆர் நிறுவனம் தனது இன்னொரு விமானத்தை உடனடியாக பெங்களூருக்கு அனுப்பியது.
அந்த விமானம் டெல்லியிலிருந்து வர தாமதமாகும் என்பதால் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கொண்டு வரப்பட்டு அதில் சோனியா காந்தியும், ப.சிதம்பரமும் அந்த கோவை கிளம்பி வந்தனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஈரோடு சென்று காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்றார். பின்னர் கோவை திரும்பிய அவர் சிறப்பு விமானத்தில் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பு:
சென்னை வந்த சோனியா காந்தியை விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி பூங்கொடுத்து வரவேற்றார்.
அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற சோனியா இரவு அங்கேயே தங்கினார். இன்று சென்னை பல்கலைக்கழக விழாவில் சோனியாவும் பிரதமரும் பங்கேற்கின்றனர்.