அணு ஒப்பந்தம் மிக அவசியம்: சோனியா
ஈரோடு:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கியதும் தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாடு நீங்கும். நாட்டின் மின் தேவைக்கு அணு ஒப்பந்தம் மிகவும் தேவை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்த பொதுக்கூட்டம் வரலாற்று சிறப்புப் பெற்றது. வானிலை, விமான பழுது என்று பல இடையூறுகளை கடந்து, பெரியார் பிறந்த இந்த மண்ணி்ல் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது பெருமையாக உள்ளது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் மீது தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றனர். அதேபோல நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரும் தமிழ்நாட்டு மக்கள் மீது தனி அன்பு வைத்திருந்தார்கள். அதுபோல் மிகப்பெரிய தலைவரான காமராஜரை இந்த தமிழக மண் கொடுத்து பெருமை சேர்த்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கிராமங்களில் கட்டுமான வசதி, குடிநீர், சாலை, தொலை தொடர்பு வசதிகள் ஆகியவற்றை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் எதுவும் இல்லாத அளவுக்கு அனைத்து பாதைகளும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்படும்.
அணு சக்தி அவசியம்...:
நம் நாட்டில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறோம். நமது எல்லா தேவைக்கும் மின்சாரம் வேண்டும். மக்களின் நலன் கருதியே அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க உறுதி மேற்கொண்டு உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின்சக்தி அவசியமாகும்.
அணுவின் மூலம் மின் உற்பத்தி செய்வது அவசியாகும். எனவேதான் அணு ஒப்பந்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இதன் மூலம் விவசாயம், தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பலனடைவார்கள்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை செயல்பட தொடங்கியதும் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டும் நீங்கும்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகள் மீது அக்கறை கொண்டது. விவசாயிகளின் துயரை துடைக்க நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பெற்றிருந்த ரூ.66 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 16 லட்சம் விவசாயிகள் ரூ.5,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மொழியும் கலாசாரமும் மிகவும் தொன்மையானது. இதை போற்றும் வகையில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கி, செம்மொழி ஆராய்ச்சி மையத்தை சென்னையில் தொடங்கி இருக்கிறோம். இதன் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தமிழின் பெருமையை உயரச் செய்வோம்.
சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் ஒன்றாக கருதி அனைவரின் மேம்பாட்டுக்காக காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. ஆனால் சில கட்சிகள் மதம், ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கிறார்கள். சமுதாய ஒற்றுமைக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.