சம்பளம் தராத புதுவை அரசு- பேராசிரியர்களின் சோகம்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உயர் கல்வித்துறையில் பல்வேறு சீர்கேடுகள் உள்ளன. அதன் உச்சகட்டமாக ஐந்து நாள்களாகியும் உயர் கல்வித்துறையில் பணிபுரியும் பேராசிரியர்கள் உட்பட பலருக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாகும்.இது மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி பார்வையில் உள்ளது. துணைநிலை ஆளுநருக்கு இங்கு முக்கியத்துவம் அதிகம். இவர் கையெழுத்து இட்டால்தான் பதவியமர்த்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.
இங்கு அண்மையில் நடந்த அரசியல் மாற்றங்களால் முதல்வர் பதவியை ரங்கசாமி இழந்தார். புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவி ஏற்றார்.
இந் நிலையில் ஆகஸ்டு மாதத்திற்கு உரிய ஊதியம் இன்னும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு வழங்கவில்லை. இதைக்கண்டித்து இன்று புதுச்சேரி மாநிலக் கல்லூரிப் பேராசிரியர்கள் சங்கம் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து கல்லூரிப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி பிரதேசத்தில் பணிபுரிபவர்கள் பல மாநிலங்கைச் சேர்ந்தவர்கள். இங்கு உயர் கல்வித்துறை சரியான வசதிகள் செய்து தராததால் யு.ஜி.சி வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இவர்களில் பலர் தமிழக அரசின் பணிக்கு சென்றுவிட்டனர்.
இதே சம்பளப் பிரச்சினை உள்ளிட்டவை நீடித்தால் மேலும் பலரும் புதுச்சேரி அரசு பணியை விட்டுவிட்டு தமிழக அரசுப் பணிக்கு செல்ல நேரிடும் நிலை உள்ளது.
சம்பளத்தை வழங்காத அதிகாரிகளைக் கண்டித்து ஆசிரியர் தினமான இன்று புதுச்சேரி மாநில பேராசிரியர்கள் சங்கம் இன்று 5.9.2008 மாலை 4.45 மணி முதல் 5.45 மணிவரை புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.