உறுப்பு தானம் செய்த ஹிதேந்திரன் பெற்றோருக்கு ஜனாதிபதி விருது தர கோரிக்கை
நெல்லை: தங்களது மகனின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்த திருக்கழுக்குன்றம் டாக்டர் தம்பதிக்கு குடியரசுத் தலைவர் விருது அளித்து கெளரவிக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சியில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் ஏஎல்சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் மேயர் இரங்கல் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அந்த தீர்மானம் தொடர்பாக ஏ.எல் சுப்பிரமணியன் பேசுகையில் ஹிதேந்திரன் மறைந்தாலும் இன்னும் வாழ்கிறார். அவர்களது பெற்றோரின் தியாக மனோப்பான்மையை இந்த மாமன்றம் பாராட்டுகிறது என்றார்.
அதிமுக கவுன்சிலர் சுதா பரமசிவன் பேசுகையில், இந்தியாவில் யாரும் செய்ய முடியாத கொடையை ஹிதேந்திரனின் பெற்றோர் செய்துள்ளனர். அவர்களின் கருணை மனோபன்மையை பாராட்டி ஜனாதிபதி விருது வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து அனைவரும் ஹிதேந்திரன் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.