மார்கரெட் ஆல்வா ராஜினாமா ஏற்பு - கமிட்டிகளிலிருந்து நீக்கம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த மார்கரெட் ஆல்வாவை, கட்சியின் பல்வேறு கமிட்டிகளிலிருந்து காங்கிரஸ் மேலிடம் நீக்கியுள்ளது. அவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் சீட் தந்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் மார்கரெட் ஆல்வா. இந்த பேச்சால் கடுப்பான காங்கிரஸ் மேலிடம், ஆல்வா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.
இந்த நிலையில் மார்கரெட் ஆல்வா நேற்று தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். ஆல்வாவின் ராஜினாமா கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்க் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர், தேர்தல் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிரு்நது இன்று மார்கரெட் ஆல்வாவை கட்சி மேலிடம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
பொதுச் செயலாளராக இருந்து வந்த 66 வயது மார்கரெட் ஆல்வா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநில காங்கிரஸ் விவகாரங்களைக் கவனித்து வந்தார்.
தற்போது மகாராஷ்டிர மாநில பொறுப்பை ஏ.கே.அந்தோணியும், மோதிலால் வோரா ஹரியானாவையும், பஞ்சாப்-சண்டிகர் பொறுப்பை மோஷினா கித்வாயும், மேகாலா, மிஸோரம், நாகாலாந்து பொறுப்பை ஆஸ்கர் பெர்னாண்டஸும் கவனிப்பார்கள் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.