அரிசி ஆலையிலிருந்து 15 கொத்தடிமைகள் மீட்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த சிறுவன் உட்பட 15 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூர் அருகில் உள்ளது லோகுரெட்டியார் அரிசி ஆலை. அந்த கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த அரிசி ஆலையில், அசப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்(35), அவரது மனைவி வெங்கம்மாள்(26), காளி(35), அவரது மனைவி நீரா(30), விராலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(52), அவரது மனைவி லட்சுமி(32), சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன்(30), அவரது மனைவி அஞ்சலை(28) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
அதே போன்று, அதே கிராமத்தில் வீரப்ப செட்டியார் அரிசி ஆலையில், கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த மணி(28), அவரது மனைவி பொன்னி(20), ஆறுமுகம் மகன் முருகன்(12), திண்டிவனம் தாலுகா அசப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் (45), அவரது மனைவி லட்சுமி(40), விராலூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(32), அவரது மனைவி செல்வி(25) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரையும் அரிசி ஆலை அதிபர்கள் கொத்தடிமைகளாக நடத்தி வருவதாக என சென்னையைச் சேர்ந்த பிரபல ஒரு தொண்டு நிறுவனம் மதுராந்தகம் ஆர்.டி.ஓ.விடம் புகார் மனு அளித்தனர்.
அதன் பேரில், ஆர்.டி.ஓ. சோமுபாண்டியன், செய்யூர் தாசில்தார் வரலட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட அரிசி ஆலைகளுக்கு திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, அங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 15 பேரை அதிரடியாக அதிகாரிகள் மீட்டனர்.
அவர்களுக்கு, நிவாரணத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இது குறித்து தாசில்தார் வரலட்சுமி செய்யூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் செய்யூர் போலீசார் சம்பந்தப்பட்ட அரிசி ஆலை அதிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.