சீருடையுடன் போராட்டம் செய்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
நெல்லை: பள்ளி மாணவர்கள் சீருடையுடன் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
நெல்லையில், கடந்த சில மாதங்களாக வகுப்புகளை புறக்கணித்து விட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பஸ் வசதி கேட்டும், ஆசிரியர் இடமாற்றம், போலீசாரின் நடவடிக்கைகள், உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தெரிவித்தும் மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். இதுபோன்ற சமயங்களில் மாணவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பையும் கல்வி துறை ஏற்கவேண்டியது உள்ளது.
சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்படும் கோஷ்டி மோதல் காரணமாகவும் மாணவர்களை தூண்டி விட்டு குளிர் காய்கின்றனர். எனவே மாணவர்கள் பள்ளி நேரங்களில் சீருடையுடன் வெளியே செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியரின் கையில் உள்ளது. பெற்றொரும் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கை குறித்து அடிக்கடி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கலெக்டர் கறார்...
பள்ளி நேரத்தில் மாணவர்களை மனு கொடுகக கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரகாஷ் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். இருப்பினும் சில பள்ளி நிர்வாகங்கள் இதனை கண்டு கொள்ளவில்லை.
விதிமுறைகளுக்கு புறம்பாக சீருடையுடன் மனு அளிக்க வரும், மாணவர்களின் மாற்று சான்றிதழ்களில் நடத்தை மோசம் என்று குறிப்பிடப்படும். இதனை அனுமதிக்கும் பள்ளி நிர்வாகத்தினர் மீது இலாக பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் பரிநதுரை செய்யப்படும் என்று கலெக்டர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.