ஆள் கடத்தல்: சரவண பவன் சிவக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: அமெரிக்காவுக்கு போலி விசா மூலம் ஆட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள சரவண பவன் நிர்வாக இயக்குநர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் 2வது பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவுக்கு போலி விசா மூலம் ராமு என்பவரை அனுப்ப முயன்றதாக கூறி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நான்கு பேரை இதற்கு முன்பு இப்படி அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சிவக்குமாரும், ராமுவும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜாமீன் கோரி எழும்பூர் 2வது பெருநகர நீதிமன்றத்தில் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார்.
அப்போது போலீஸ் தரப்பில், விசாரணை இன்னும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது. பல முக்கிய ஆவணங்கள், டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த டிவிடிக்களில் சிவக்குமார் செய்த தவறுகள் குறித்த பல முக்கிய ஆவணங்கள் இருக்கும் என சந்தேகிக்கிறோம்.
இந்த ஆவணங்களையும் டிவிடிக்களையும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது. இந்த சமயத்தில் சிவக்குமாரை ஜாமீனில் விடுவித்தால் அது விசாரணையை பாதிக்கும். எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று கோரினர்.
இதையடுத்து சிவக்குமாரின் ஜாமீன் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார். மேலும், சிறையில், ஏ கிளாஸ் வசதி கேட்டு சிவக்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.