For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்வம் எம்.எல்.ஏ. ராஜினாமா - பகுஜன் சமாஜில் இணைந்தார் - தலைவர் ஆனார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மங்களூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியில் அவர் இணைந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் வலது கரம் போல செயல்பட்டு வந்தவர் செல்வம். அக்கட்சியின் நம்பர் டூ தலைவராகவும் திகழ்ந்தார். மங்களூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஆனால் சமீபத்தில் அவருக்கும், திருமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார் செல்வம். தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

மேலும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணையவும் அவர் முடிவு செய்தார். இதற்காக டெல்லி சென்று மாயாவதியை சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று சபாநாயகர் ஆவுடையப்பனை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் செல்வம்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், பகுஜன் சமாஜ் கட்சியி்ல் செல்வம் இணைந்தார். கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுரேஷ் மானே முன்னிலையில், செல்வம், பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்வம் பேசுகையில், இலங்கை இனப்படுகொலையைத் தடுக்க தமிழக அரசும், மத்திய அரசும் தவறி விட்டன. மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத் தடுக்க மத்தியில் நல்லாட்சி ஏற்பட வேண்டும். அது மாயாவதியால் மட்டுமே முடியும். இதை கருத்தில் கொண்டுதான் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைய முடிவு செய்தேன்.

தலித் மக்களுக்கு மாயாவதியால் மட்டுமே வழி காட்ட முடியும்.

நான் ஏன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை தொகுதி மக்களிடம் விளக்கிக் கூறுவேன். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்து விட்டேன்.

சில கசப்பான அனுபவங்களை சந்தித்து விட்டேன். இதனால் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் செல்வம்.

தலைவர் ஆனார்

பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ள செல்வத்தி்ற்குத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக உள்ள ஆர்ம்ஸ்ட்ராங் இனி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என சுரேஷ் மானே தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X