கோவைக்கு ஒரே விமானத்தில் பயணித்த வைகோ, விஜயகாந்த்
கோவை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் கோவைக்கு ஒரே விமானத்தில் பயணித்தனர். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டதாக பின்னர் வைகோ தெரிவித்தார்.
சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் வைகோவும், விஜயகாந்த்தும் எதைச்சையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது என்ன பேசுவது என்ற சங்கடத்தில் வைகோ விலகிச் செல்ல, விஜயகாந்த்தே வலியச் சென்று வைகோவிடம் பேசினார்.
நான் மதிக்கும் தலைவர்களி்ல் நீங்களும் ஒருவர், பேசாமல் போகலாமா என்று விஜயகாந்த் வைகோவிடம் கேட்டதாக கூறப்பட்டது. பின்னர் பரஸ்ரம் வணக்கம் சொல்லிக் கொண்டு இருவரும் அவரவர் பாதையில் சென்றனர்.
இந்த நிலையில், நேற்றும் இருவரும் எதைச்சையாக சந்தித்துக் கொண்டனர். மரியாதை பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் நேற்று கோவைக்கு விமானம் மூலம் சென்றார்.
அதேபோல ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் கோவை சென்றார் வைகோ. இருவரும் ஒரே விமானத்தில் பயணித்தனர்.
விமானம் கோவை வந்ததும் முதலில் விஜயகாந்த் வெளியே வந்தார். பின்னர் வைகோ வந்தார். வைகோவிடம் ஏதாவது பேசினீர்களா என்று விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொண்டோம். இருவரும் வேறு வேறு இருக்கைகளில் அமர்ந்து பயணித்தோம் என்றார்.
பின்னர் வந்த வைகோவிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தம் இருவரும் வணக்கம் தெரிவித்துக் கொண்டோம். வேறு எதுவும் பேசவில்லை என்றார்.