தனி ஈழம்: கருணாநிதி பதில் சொல்ல வேண்டும்-விஜய்காந்த்
கோவை: 1987ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக எம்ஜிஆர் போராட்டம் நடத்தியபோது, இலங்கை பிரச்சனைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்று சொன்னவர் கருணாநிதி. இப்போது தனி ஈழம் தான் தீர்வா என்பதற்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கோரியுள்ளார்.
பொள்ளாச்சியில் ஒரு படப் பிடிப்பில் கலந்து கொள்ள கோவை வந்த விஜய்காந்த் அங்கு நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என முதல்வர் கருணாநிதி மீண்டும் கூறுவதும் கூட நாடகம் தான். இந்தப் பிரச்சனையில் நாடகமாடக் கூடாது.
உடனே மத்திய அரசை நிர்பந்தித்து போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்.
சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டால் மட்டுமே அங்கு அமைதி திரும்பும். அந் நாட்டுப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் தான் தீர்வு காண முடியும் என அனைவரும் சொல்கிறோம்.
ஆனால், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?.
1987ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக எம்ஜிஆர் போராட்டம் நடத்தியபோது, இலங்கை பிரச்சனைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்று சொன்னவர் கருணாநிதி. இப்போதும் தனி ஈழம் தான் தீர்வா என்பதற்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும் என்றார் விஜய்காந்த்.