சோனியாவின் 62வது பிறந்த நாள் - கொண்டாட்டம் இல்லை
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த அடுத்த நாளான இன்று பிறந்த நாள் வந்திருப்பதால் காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். இருப்பினும் சோனியா காந்தி கேட்டுக் கொண்டதற்கேற்ப இன்று காங்கிரஸார் யாரும் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
இருப்பினும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்திக்க சோனியா மறுத்து விட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் சிலருடன் மட்டுமே சோனியா காந்தி பிறந்த நாளை கொண்டாடுவதாக கூறப்பட்டுள்ளது.
1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி இத்தாலியின் டூரின் நகருக்கு அருகே உள்ள ஓவஸாஞ்சோ என்ற இடத்தில் சோனியா காந்தி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா பிறந்த நாள் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், சோனியா காந்தியின் 62வது பிறந்த நாளையொட்டி டெல்லி, ராஜஸ்தான், மிஸோரமில் ஆட்சியை காங்கிரஸுக்குக் கொடுத்து மக்கள் பெரிய பரிசைக் கொடுத்து விட்டனர் என்றார்.
சோனியாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது ஜன்பத் இல்லத்திற்கு பெரும் திரளான தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இருப்பினும் கொண்டாட்டம் எதுவும் இல்லாததால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.