புதுச்சேரியில் கன மழை - தமிழகத்தில் பரவலாக மழை
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முதல் விடாமல் கன மழை பெய்து வருவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்து விட்டதால், புயல் அபாயம் நீங்கியது. மழை மட்டும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. சில இடங்களில் கன மழை பெய்துள்ளது. தொடர்ந்து மேகமூட்டமாகவும், லேசான மழையுமாக உள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது. நேற்று தொடங்கிய மழை இன்னும் நிற்காமல் தொடர்ந்து பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 88 மில்லி மீட்டர் மழை புதுச்சேரியில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.