வி.எச்.பி.யின் அமெரிக்க தொடர்புகள் - ஓபாமா விசாரிக்க கோரிக்கை
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் சிலவற்றுக்கும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்புக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஓபாமாவுக்கு மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து படுகொலைக்கு எதிரான கூட்டணி என்ற அந்த அமைப்பு இதுதொடர்பாக ஓபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்காவில் உள்ள சில இந்து மத அமைப்புகள், இந்தியாவில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் மதவாத அமைப்புக்கு நிதியுதவி செய்கின்றன.
இந்த அமைப்புகளுக்கும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்புக்கும் உள்ள தொடர்புகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். இவற்றின் தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.
வி.எச்.பி. அமெரிக்கா, இந்தியா வளர்ச்சி மற்றும் நிவாரண நிதியம், ஏகல் வித்யாலயா ஆகியவை இந்தியாவில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றன.
தாங்கள் வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றிடமிருந்து வேறுபட்டவர்கள் என இந்த அமைப்புகள் கூறினாலும் கூட இந்த அமைப்புகளின் கொள்கைகள், செயல்பாடுகளில் எந்த வித்தியாசமும் இல்லை. பல விஷயங்கள் இவர்கள் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.