சத்யத்தை மீட்க நிதியுதவிக்கு முன்வரும் நிறுவனங்கள்
புதிய இயக்குநர்கள் நியமனத்தால் சற்று நம்பிக்கை பெற்ற நிதி நிறுவனங்கள் சில, சத்யத்தை நெருக்கடியிலிருந்து மீட்க நிதியுதவி தர முன்வந்திருக்கின்றன.
இதைவிட முக்கியமான செய்தி, சத்யம் நிறுவனத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேண்டிய ரூ.1700 கோடி உடனடியாகக் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியத் துவங்கியிருப்பதுதான்.
சத்யம் இயக்குநர் குழுவுக்கு அரசு மேலும் 3 இயக்குநர்களை நியமித்ததைத் தொடர்ந்து, சத்யம் நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களைத் தேடிப் போவதாக இல்லை என தற்காலிகமாக முடிவெடுத்துள்ளனர். இதுவே அந்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கைவிட்டுப் போகவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட சத்யம் நிறுவன பேங்கர்கள், மீண்டும் கணிசமான முதலீட்டை இறக்கத் தயாராகியுள்ளனர். ஆனால் இது சத்யம் நிறுவனத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் அல்ல. அரசு அளித்துள்ள உறுதியினால்.
இன்னொருபக்கம், சத்யம் நிறுவனத்துக்கு, வரவேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு என்று புதிய இயக்குநர்கள் குழு கணக்குப் பார்க்கத் துவங்கியுள்ளது.
இதுவரை, ரூ.1700 கோடி அந்நிறுவனத்துக்கு வரவேண்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தத் தொகை கூடிய விரைவில் வந்துவிடும் என்றும், இதே போல இன்னும் பலகோடி ரூபாய் பாக்கியிருப்பதாகவும், அதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் இயக்குநர் குழுவின் உறுப்பினர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
'சத்யம் நிறுவனத்துக்கு வரவேண்டியுள்ள தொகை முழுவதுமாகக் கிடைத்தாலே போதும், எந்த நிதியுதவியும் அந்த நிறுவனத்துக்குத் தேவையில்லை. சத்யம் மூடப்பட்ட நிறுவனம் அல்ல. இன்னும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிற நாட்டின் பெரிய ஐடி நிறுவனம். எனவே நிதிப் பிரச்சினை விரைவில் தீரும் என்றே நம்புகிறேன்', என்றார் பரேக்.
'மைனாம்பதி ஓடவில்லை!!'
இந்நிலையில் சத்யம் முன்னாள் இடைக்கால தலைமை நிர்வாகி ராம் மைனாம்பதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுவது குறித்து தீபக் பரேக்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், 'மைனாம்பதியும், சில மூத்த அதிகாரிகளும் வெளிநாடுகளில் உள்ள சத்யம் நிறுவன வாடிக்கையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி அவர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறும் முயற்சியில் உள்ளனர். அவர்களில் பலரும் என்னுடன் பேசிக்கொண்டுதான் உள்ளனர், மைனாம்பதி உள்பட', என்றார் பரேக்.