கொழும்பில் மேனன் - நாளை ராஜபக்சேவுடன் பேசுகிறார்
கொழும்பு: கொழும்பு வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதிபர் ராஜபக்சேவை நாளை சந்திக்கிறார்.
இலங்கை அரசு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நிறுத்த வேண்டும். இதை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்று நேரில் வலியுறுத்த வேண்டும் என தமிழகத்திலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரணாப் கொழும்பு செல்வது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கதவை உடைத்துக் கொண்டு கொழும்புக்குப் போய் விட முடியாது. போர் நிறுத்தம் குறித்தும் பேசும் மன நிலையில் இலங்கை இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்குப் பதில் மேனனை மத்திய அரசு கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
நேற்று இரவு மேனன் கொழும்பு புறப்பட்டுச் சென்றார். இன்று காலை அவர் வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா, வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோதபாயா ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
அதிபர் ராஜபக்சே கண்டி சென்றுள்ளதால், நாளை அவரை மேனன் சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது, இலங்கைப் பிரச்சினையில் தீர்வு, அமைதியை ஏற்படுத்துவது ஆகியவை குறித்து மேனன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்துவாரா என்பது தெரியவில்லை.