இலங்கைத் தமிழர்களைக் காக்க கோரி தீக்குளிப்பு முயற்சி -3 பேர் கைது
கோவை: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறத்தி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தினர் மூவரை போலீஸார் தடுத்துக் காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நேற்று பெரியார் தி.க.வைச் சேர்ந்த சிலர் தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் முழுவதும் ஆங்காங்கு கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பிற்பகல் வாக்கில் தலைமை தபால் நிலைய சாலையிலிருந்து 3 பேர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு ஓடி வந்தனர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஈ.வெ.பெரியார் ஜெகன், கோபிநாத், சம்புகன் என்பது தெரிய வந்தது. இவர்களில் பெரியார் ஜெகன் ஈரோட்டைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.