For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை ஊழியர் தீக்குளித்து தற்கொலை

By Sridhar L
Google Oneindia Tamil News

Shastri Bhavan
சென்னை: இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில், சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை நிறுவன ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூரைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் முத்துக்குமார். இவர் பெண்ணே நீ மாத இதழில் கணினி துறையில் பணியாற்றி வந்தார்.

இன்று காலை மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனுக்கு வந்த அவர், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டார்.

பின்னர் சட்டென்று தனது கையில் இருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ந்து போனது.

உடல் முழுக்க தீயுடன் சாஸ்திரி பவன் வளாகத்திற்குள் அங்குமிங்கும் அலறியபடி ஓடினார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அப்படியே ஒரு இடத்தில் விழுந்தார்.

உடனடியாக விரைந்து வந்த போலீஸார் முத்துக்குமார் உடலில் எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் உடல் முழுவதும் கருகி விட்டதால் டாக்டர்களால் முத்துக்குமாரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

முத்துக்குமார் பெண்ணே நீ மாத இதழில் டிடிபி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தார்.

முத்துக்குமாருக்கு வயது 30. கொளத்தூர் மக்கான் தோட்டம், திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்தார்.

முத்துக்குமாரின் தற்கொலைச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மரண வாக்குமூலம்

மரணத்தை தழுவும் முன்பு முத்துக்குமார் போலீஸாரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும்.

எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.

எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன்.

இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன்.

வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.

அண்ணன் பிரபாகரனுக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். திருமாவளவனுக்கும் தகவல் கொடுங்கள். பிரபாகரன் கில்லாடி. எப்படியாவது நான் எரிந்து கொண்ட தகவலை தெரிந்து கொள்வார் என முத்துக்குமார் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X