தமிழக வெற்றியே மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும்-சிதம்பரம்
அவர் மீண்டும் சிவகங்கையில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் ஆகியவை எல்லாம் முடிவாவதற்கு முன்பே சிவகங்கையில் அவர் தனது பிரச்சாரத்தை துவக்கி விட்டார்.
அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தலைமையில் தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுல்ளது. தேர்தல் பிரசாரக் குழுக்கள் தவிர வட்டாரம், கிராமங்கள் வாரியாக பனிக் குழுகளும் அமைக்கப்பட்டுவிட்டன.
சிவகங்கையில் பல இடங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்தி வரும் சிதம்பரம் திருபுவனத்தில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியேற்ற 5 ஆண்டுகளில் இந்த மாவட்டத்துக்கு கல்வி கடன் மட்டும் ரூ.72 கோடி வழங்கப்பட்டு, 16,082 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
வசதி இல்லாதவர்கள் கல்வி கடன் பெற்று வாழ்க்கையில் முன்னேற எங்கள் ஆட்சி உதவி செய்துள்ளது. பாஜக ஆட்சி பணக்காரர்களுக்கு சாதகமாக இருந்தது. விவசாயிகள் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாமல் இருந்தனர்.
ஆனால், தற்போதைய அரசு 3.65 கோடி விவசாயிகளுக்கு ரூ.65 கோடி விவசாயக் கடனை ரத்து செய்தது.
பாஜக ஆட்சியில் 5.8 சதவீதமாக இருந்த நாட்டின் வளர்ச்சி விகிதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 9 சதவீதமாக உயர்ந்தது. கல்விக் கடன், மகளிர் கடன், அகல ரயில் பாதை, சேது சமுத்திரத் திட்டம், மருத்துவக் கலூரி என சிவகங்கை மாவட்டத்துக்கு மத்திய அரசு பல திட்டங்களை வழங்கிவுள்ளது.
எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணியை கடந்த முறை ஆதரித்து 40 தொகுதியையும் வெற்றி பெற செய்ததுபோல் இந்த முறையும் வெற்றிபெற செய்யுங்கள்.
தமிழ்நாட்டில் நீங்கள் அளிக்கும் வெற்றி தான் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் என்றார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. விவசாயிகள் நிறைந்த இந்தத் தொகுதியில் சிதம்பரம் 7 முறை போட்டியிட்டு 6 முறை வென்றுள்ளார்.
இந்தத் தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ப.சிதம்பரத்தை எதிர்க்கும் வலிமையான வேட்பாளரை அதிமுக தேடி வருகிறது. முன்னாள் எம்பி கோகுல இந்திரா, சமீபத்தில் அதிமுகவு்க்குத் தாவிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்தத் தொகுதியி்ல் பாஜக சார்பில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
தனியாருக்கு நிலமா-சிதம்பரம் மறுப்பு:
இதற்கிடையே அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு நான் உடந்தையாக இருந்தேன் என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை எழுப்பி காரைக்குடியில் நேற்று முன்தினம் சில அரசியல் கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குணசேகரன் எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடத்தியதாக தகவல் அறிந்தேன்.
இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின்படி தனியார் நிறுவனம் ஒன்று புதிய தொழில் தொடங்குவதற்காக குத்தகை அடிப்படையில் அரசு இடத்தை கோரியது. அந்த தொழில் தொடங்குவதன் மூலம் சுமார் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இவற்றை கருத்தில் கொண்டு அந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 3.5 ஏக்கர் நிலத்தை மட்டும் அந்த நிறுவனத்துக்கு குத்தகை அடிப்படையில் தரலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்திருக்கிறார்.
எனவே 500 ஏக்கர் நிலத்தை தாரை வார்த்து இருப்பதாக சொல்வது முற்றிலும் பொய்யானது. இதற்கு நான் உடந்தையாக இருந்தேன் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. பொய்யையும் புழுகையும் அவிழ்த்து விடுவது என்பது சில அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.
தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் அரசுக்கும் இடையே உள்ள ஒரு இயல்பான கோரிக்கையில் என் பெயரை இழுத்திருப்பது தேவையில்லாத செயல். இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்ற குணசேகரன் எம்.எல்.ஏ. கடந்த 8ம் தேதி அன்று என்னை எங்கள் கட்சியின் சிவகங்கை அலுவலகத்தில் சந்தித்தார். கடந்த 3 ஆண்டுகளில் தொகுதிக்கு நான் ஆற்றியிருக்கும் பணிகளை பற்றி புகழ்ந்து பேசினார். கடைசியில் என்னிடம் ஒரு சிபாரிசையும் சொன்னார்.
அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு நான் உடந்தையாக இருந்தேன் என்று ஒரு முனு முனுப்புக்கூட இல்லை. திடீரென்று 4 நாட்கள் கழித்து அவர் போராட்டத்துக்கு தலைமை தாங்கி இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. அரசியல் எப்படி ஒரு மனிதனை அலைக்கழிக்கிறது என்று வியந்து நிற்கிறேன்.
அந்த போராட்டத்தில் குணசேகரன் எம்எல்ஏவும் மற்றவர்களும் தேவையில்லாமல் எனது பெயரை இழுத்து என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உடனடியாக நிபந்தனை இல்லாத மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்களுக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீசு அனுப்பப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.