சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்-டைட்லர் நிரபராதி: சிபிஐ
இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இறுதிக்கட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பாக டைட்லர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யலாம் எனவும் சிபிஐ பரி்ந்துரைத்துள்ளது.
இதுகுறித்து டைட்டலர் கருத்து தெரிவிக்கையில், இந்த வழக்கு எனது அரசியல் வாழ்க்கையையே சீரழித்து விட்டது. நான் நிரபராதி என்பதை இப்போது அனைவரும் உணர்வர்.
மீடியாக்கள் என்னை ஏதோ கிரிமினல் போலவே சித்தரித்து வந்தன. நான் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற ஆர்வமாக உள்ளேன் என்றார்.
சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கையில், டைட்லர் குற்றவாளியாக கூறப்பட்டிருந்தார்.
மேலும் ஜஸ்பீர் சிங் என்பவரும் நானாவதி கமிஷன் முன்பு டைட்லருக்கு எதிராக வலுவான சாட்சியத்தை அளித்திருந்தார். அதுதான் டைட்லருக்கு எதிராக இருந்து வந்தது.
ஆனால் ஜஸ்பீர் சிங்கின் வாக்குமூலத்தை ஏற்க முடியாது. அதில் நம்பகத்தன்மை இல்லை என்று சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பீர் சிங் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரிடம் சிபிஐ குழு நேரில் சென்று வாக்குமூலத்தை பதிவு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்பீர் சிங் தான் அளித்த வாக்குமூலத்தில், 1984ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி டைட்டலர் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரத்தை ஏற்படுத்தி அவர்களையும், அவர்களது சொத்துக்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டதை தான் கேட்டதாக கூறியிருந்தார்.
சூச்சா சிங் என்பவரின் வீட்டில் இருந்தபோதுதான் டைட்லரின் இந்த உத்தரவு தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் சிபிஐ தனது விசாரணையின்போது சூச்சா சிங் என்ற பெயரில் யாரும் இருந்ததாக ஆதாரம் இல்லை என்று கூறியது.
அதேபோல சுரீந்தர் சிங் என்ற இன்னொரு சாட்சி சிபிஐயிடம் கூறுகையில், புல் பங்கஷ் குருத்வாராவில் நான் கலவரக்காரர்களிடமிருந்து தப்பி மறைந்திருந்தேன். அப்போது டைட்லர், ஒரு கும்பலுடன் வந்து கண்ணில் பட்ட சீக்கியர்களை எல்லாம் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் பின்னர் தனது வாக்குமூலத்தை சுரீந்தர் சிங் வாபஸ் பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.