தென்காசியில் சிபிஐ சார்பில் பெண் வேட்பாளர்?
தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில், பெண் வேட்பாளரை நிறுத்துவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலனை செய்து வருகிறது.
தென்காசி பாராளுமன்ற தொகுதியை அதி்முக கூட்டணி சிபிஐக்கு ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணி காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த இரு கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசியில் அதிமுக போட்டியிடும் என்று கருதப்பட்ட நிலையில், கம்யூ கட்சியும், திமுக போட்டியிடும் என்று கருதப்பட்ட நிலையில் காங்கிரசும் போட்டியிட உள்ளதால் வேட்பாளர் அவரா, இவரா என்று எதிர்பார்ப்புகள் கட்டுப்பாடில்லாமல் எழுந்து கொண்டுள்ளன.
தென்காசி தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்ட நடிகர் விஜயகாந்த் தேமுதிக வேட்பாளர் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்று கூறிவிட்டு சென்று 4 நாட்கள் கடந்து விட்ட நிலையில் அவரும் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் இருக்கிறார்.
இந்திய கம்யூ கட்சி வேட்பாளராக ராமகுரு,ரவீந்திரன் ஆகிய 2 பேரில் ஒருவர் பெயர் அறிவிக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு தென்காசி தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்படி பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டால் கடையநல்லூர் நகராட்சியின் 5-வது வார்டு கவுன்சிலரும், மாவட்ட மாதர் சங்க தலைவியுமான சரஸ்வதிதான் வேட்பாளர் என்று கூறப்படுகிறது. அவருக்கு 3 மொழிகள் தெரியும் என்பது பிளஸ் பாயிண்டாகும்.
களக்காடு ஓன்றிய செயலாளர் பெரும்படையான் என்பவர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. நாளை நெல்லையில் நடைபெறும் இந்திய கம்யூ மாவட்ட கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சியின் நிலை குழு கூடி முடிவெடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.