கோவையில் ரூ. 1 கோடி கடத்தல் பொருள் பறிமுதல்
கோவை: கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ 1 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு கடந்த 27ம் தேதி சில்க் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அதில் 9 பெரிய பெட்டிகளில் வீட்டு உபயோக பொருள் என முத்திரை பதிக்கப்பட்டிருந்த பொருட்கள் வந்து இறங்கின. அதில் மூன்று பேர்களின் பெயர் மற்றும் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெட்டி வந்த மறுநாள் ஒருவர் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு டெலிவரி ரசீதை வாங்கி கொண்டு, வண்டி பிடித்து வருவதாக கூறி தலைமறைவாகி விட்டார். பெட்டியை அங்கேயே விட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து விமான நிலைய போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அட்டை பெட்டியை ஸ்கேன் செயதனர். அப்போது அந்த பெட்டியில் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அந்த பெட்டியை பிரித்து பார்த்தில் கேமரா, கைக்கடிகாரம் போன்றவை இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என தெரிகிறது.
எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சுங்க வரி கட்ட வேண்டும் என்பதால் அதை திருட்டுத்தனமாக வீட்டு உபயோக பொருட்கள் என கூறி கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அந்த பெட்டிகளில் இருந்த முகவரிக்ள் உண்மையா என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். டெலிவரி எடுக்க வந்த அந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.