திமுக நேர்காணல் தொடங்கியது, அழகிரி வரவில்லை: அஷ்டமி- ஜெ 'வெயிட்டிங்'!
திமுக வரும் லோக்சபா தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் தரப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் (2), இந்திய தேசிய முஸ்லீம் லீக் (1) ஆகியவை போட்டியிடுகின்றன. மனித நேய மக்கள் கட்சியைப் பற்றி பேச்சே இல்லை. அந்தக் கட்சியை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டது திமுக.
இதில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களுக்கு இன்று நேர்காணல் தொடங்கியது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்க, அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் நேர்காணல் நடக்கிறது.
தேர்தல் பணிக் குழுவை சேர்ந்த அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.
நேர்காணலைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.
இன்று காலை கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
அழகிரி வரவில்லை..:
இதில் மதுரை தொகுதிக்கு யாரும் அழைக்கப்படவில்லை. காரணம், அங்கு மு.க.அழகிரியே போட்டியிட வேண்டும் என நூற்றுக்கணக்கான மக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேறு யாரும் விருப்ப மனு தரவில்லை.
எனவே மு.க.அழகிரி இன்று நேர்காணலில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் நேர்காணலுக்கு வரவில்லை.
மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்திய தலைவர்கள் பேசினர். நேர்காணல் அறைக்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்றனர்.
தூத்துக்குடி தொகுதிக்கான நேர்காணலில் மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகனும், அமைச்சர் கீதா ஜீவனின் தம்பியுமான ஜெகன் உள்ளிட்ட 18 பேர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் தொகுதியில் நடிகர் ரித்தீஷ், தமிழச்சி தங்கப்பாண்டியன், பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட 40 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர்.
மாலையில் சென்னை, கரூர், பெரம்பலூர், திருவள்ளூர், அரக்கோணம் தொகுதிகளுக்கான நேர்காணல் தொடங்கியது.
இன்று நடந்த 10 தொகுதிகளுக்குமான நேர்காணலில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது.
நாளை மாலை வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஷ்டமி.. நவமி, ஜெயலலிதா 'வெயிட்டிங்':
இன்று அஷ்டமி, நாளை நவமி என்பதால் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் தனது வேட்பாளர்களின் நேர்காணலை நடத்த திட்டமிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் ஹேமமாலினி மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. அன்று காலை 10 மணிக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஜெயலலிதா ஆலோனை நடத்துகிறார். அதன் பின்னர் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடக்கிறது.
ஜாதகம் பார்த்து...:
விண்ணப்பித்தவர்களிடம் ஜாதகத்தையும் கேட்டு வாங்கி, ஜோசியர்களிடம் ஆலோசித்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்கனவே வேட்பாளரை முடிவு செய்துவிட்டார் ஜெயலலிதா என்கிறார்கள்.
5ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்கிறார் ஜெயலலிதா.