குமரி திமுக வேட்பாளர் தேர்வு-காங்கிரஸார் அதிர்ச்சி
சென்னை: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக ஹெலன் டேவிட்சன் என்பவர் தேர்வாகியுள்ளதாக செய்திகள் பரவியுள்ளன. இதனால் கன்னியாகுமரி காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியை திமுகவே வைத்துக் கொண்டதால் குமரி மாவட்ட காங்கிரஸார் கொதிப்படைந்துள்ளனர். பலவேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அவர்கள் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
நேற்று பகல் முழுவதும் சத்தியமூர்த்தி பவனில் அவர்கள் பெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட தொண்டர்களின் முற்றுகையால், சத்தியமூர்த்தி பவனே திணறிப் போனது.
ரயில், வேன்கள், பஸ்கள், கார்கள் என பல்வேறு வாகனங்களில் வந்து குமரி மாவட்ட தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கிள்ளியூர் ஜான் ஜேக்கப், குளச்சல் ஜெயபால் ஆகியோரது தலைமையில் திரண்டு வந்துள்ள இவர்களின் போராட்டத்தால் சத்தியமூர்த்தி பவனே நேற்று நடுங்கிப் போனது.
காங்கிரஸ் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், கருப்புக் கொடி ஏற்றியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வளவு போராட்டங்கள் நடத்திய நிலையில், குமரி தொகுதியை எப்படியும் காங்கிரஸ் தலைமை திமுகவிடம் பேசி வாங்கித் தந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த தொண்டர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், குமரி தொகுதிக்கு திமுக வேட்பாளராக ஹெலன் டேவிட்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது.
ஹெலன் டேவிட்சன் தேர்வு செய்யப்பட்டது உண்மையாக இருக்குமானால் அவரை ஆதரிக்க மாட்டோம் என கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை அவசரமாக சந்தித்துப் பேசினார் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனமும் உடன் சென்றிருந்தார்.
அப்போது கன்னியாகுமரி தொகுதியை மாற்றித் தருவது குறித்து முதல்வரிடம் தங்கபாலு கோரியதாக தெரிகிறது.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு,
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தொகுதிகள் முடிவாகிவிட்டன.
கன்னியாகுமரி பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரிடம் பேசியிருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தை தொடரும். காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிடவில்லை. எங்கள் தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். இது தொடர்பாக மாவட்ட தலைவர்களிடமும், எம்.எல்.ஏ.க்களிடமும் பேசிவிட்டோம்.
அவர்களை சமாதானம் செய்து விட்டோம். தொண்டர்கள் ஊருக்கு திரும்புவார்கள். இந்த போராட்டத்திற்கும் தொகுதி ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தமில்லை. தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கியாகிவிட்டன.
கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் தலைமை தீவிரமாக சிந்தித்து நல்ல முடிவை எடுப்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சினைக்கு கட்சி தலைமை விரைவில் சரியான முடிவை எடுக்கும் என்று கூறியிருந்தார்.
பேட்டியின்போது குமரி மாவட்ட குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ ஜெயபால் உடன் இருந்தார். அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுமரியை காங்கிரஸுக்கு ஒதுக்காவிடடால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கோபத்துடன் கூறினார்.
தங்கபாலுவை பக்கத்தில் வைத்துக் கொண்டே ஜெயபால் இவ்வாறு கூறியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இன்று காலையும் குமரி மாவட்ட காங்கிரஸார் சத்தியமூர்த்தி பவனில் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
அலுவலகத்தின் மெயின் கேட்டை தொண்டர்கள் மூடி வைத்துள்ளனர். இதனால் யாரும் வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.