ஜெ.வை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கு.ப.கிருஷ்ணன்
ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தின்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கி. ஆட்சி போன பின்னர் அதிமுகவிலிருந்து விலகினார். தனது முத்தரையர் சமூகத்தை நம்பி தமிழர் பூமி என்ற கட்சியை நடத்தினார்.
இருப்பினும் கட்சியை தொடர்ந்து நடத்த முடியாததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை தேமுதிகவுடன் இணைத்து விட்டார். இதையடுத்து அவரை மாநில துணைச் செயலாளராக நியமித்தார் விஜயகாந்த்.
இந்த நிலையில் தற்போது தேமுதிகவிலிருந்து விலகி மறுபடியும் அதிமுகவுக்குத் திரும்பி விட்டார் கு.ப.கி.
நேற்று மாலை ஜெயலலிதாவை நேரில் சந்தித்த கு.ப.கி அவர் முன்னிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
வாக்குகளைப் பிரிப்பது வருத்தமாக இருக்கிறது ...
பின்னர் செய்தியாளர்களிடம் கு.ப.கி கூறுகையில்,
விஜயகாந்த் கட்சியை நடத்தும் விதத்தில் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் உள்ள அகில இந்திய கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் தே.மு.தி.க. மட்டும் தனித்து போட்டி என்று அறிவித்து களத்தில் நிற்பதும், வாக்குகளை பிரிப்பதும் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது.
கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து விஜயகாந்த் மத்தியில் உள்ள காங்கிரசையும், தமிழகத்தில் உள்ள தி.மு.க. ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இப்போது தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால், ஆளும் கூட்டணிக்கு சாதகமாகவும், எதிர்கட்சியாக இருக்க கூடிய அ.தி.மு.கவுக்கு ஒரு பலவீனத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வோடும் அமைவதாக நான் கருதுகிறேன்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய, என்னை வளர்த்த அ.தி.மு.க.வில் அந்த கூட்டணிக்கு வாக்குசிதறல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தேன்.
ராமர் போல சந்தோஷம் ..
13 ஆண்டுகள் வனவாசம் போன ராமர் அயோத்தியில் வந்த போது என்ன மகிழ்ச்சியை பெற்றாரோ, அதே போல போயஸ் தோட்டத்திற்குள் இன்று நான் மீண்டும் நுழைந்து ராமர் பெற்ற மகிழ்ச்சியை பெற்றேன் என்றார் கு.ப.கி.