கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா போட்டி?
தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளை இணைத்து கள்ளக்குறிச்சி தொகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு திமுக கூட்டணியில் மத்திய அமைச்சர் வேங்கடபதி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியி்ல் இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் தன்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் பாமகவின் கோட்டைகளை சலசலக்க வைத்தார் விஜயகாந்த். முத்தாய்ப்பாக விருத்தாச்சலத்தில் அக்கட்சி வேட்பாளரை தோற்கடித்த விஜயகாந்த் இம்முறையும் பாமகவை ஒரு தொகுதியிலாவது வீழத்த வேண்டும் என முயற்சித்து வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக கள்ளக்குறிச்சி தொகுதியில் தற்போது இடம்பெற்றுள்ள சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கியிருந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சியில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என தேமுதிகவினர் இருப்பதாக தெரிகிறது.
இதனால் இங்கு தனது மனைவி பிரேமலதாவை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என அவர் கருதுவதாக தெரிகிறது. இதற்கு கட்சி வட்டாரத்தி்ல் அமோக வரவேற்பும் இருக்கிறதாம்.