வருணுக்கு குண்டாஸ்: உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது ஏன் என்பதை விளக்குமாறு உ.பி அரசுக்கும், பிலிபித் மாவட்ட கலெக்டருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வருண் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வருகிற 13ம் தேதிக்குள் விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு உ.பி. அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வருண் காந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், நான் சட்டவிரோதமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளேன். இந்த சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால் என்னென்ன விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் உ.பி. மாநில அரசும், பிலிபித் மாவட்ட ஆட்சித் தலைவரும் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
என்னைக் கைது செய்தது தொடர்பான எந்த ஆவணத்தையும் மாநில அரசுக்கு எனக்குத் தரவில்லை.
நான் பிலிபித் தொகுதியில் பிரசாரம் செய்ய வேண்டும். இன்னும் சில நாட்களில் அங்கு பிரசாரம் முடியவுள்ளது. எனவே இந்த கைது நடவடிக்கையை ரத்து செய்து என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் வருண் காந்தி.
முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட இரு வழக்குகளில் ஏற்கனவே வருண் காந்திக்கு ஜாமீன் கிடைத்துள்ளது நினைவிருக்கலாம். ஜாமீன் கிடைப்பதற்கு முதல் நாளில்தான் அவரை தேசிய பாதுகாப்பபுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாயாவதி அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.