கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போட்டி
திருச்சி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது அல்லது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து வரும் 11ம் தேதி முடிவு செய்யப்படும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் கூறுகையில்,
கடந்த 15 ஆண்டுகளாக எங்களது கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. வரும் 11ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும். பாஜகவைவிட, அதிமுக இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதால், அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து, இந்து மக்கள் கட்சியும் போட்டியிடும்.
மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் இடங்களில் அக்கட்சியை எதிர்த்து, இந்து மக்கள் கட்சியும் வேட்பாளரை நிறுத்தும். இதுவரை 32 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 150 பேர் மனுக் கொடுத்துள்ளனர்
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணைய அதிகாரிகளை மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது. இதுபற்றி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார் அர்ஜுன் சம்பத்.